சென்னை, ஜூலை 11 –
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, பழுதடைந்த இரண்டு இதய வால்வுகளுக்கு மீண்டும் ஒரு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. பெருந்தமனி வால்வு நோய்க்காக செய்யப்பட்ட திறந்தநிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உலகிலேயே முதல்முறையாக முழுமையாக கதீட்டர் வழியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இதுவெனக் கருதப்படுகிறது.
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான இதய வால்வு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 58 வயது நபருக்கு இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவத் துறையில் இதுவரை இதுபோன்றதொரு சிகிச்சை பதிவு செய்யப்படாததால், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ் பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவும், சர்வதேச வல்லுநர்கள் குழுவும் இச்சிகிச்சை முறையை விரிவாக ஆய்வு செய்தன.
இதுகுறித்து டாக்டர் ராஜாராம் அனந்தராமன் கூறியதாவது: “ராஸ் சிகிச்சைக்குப் பிறகு அயோர்டிக் மற்றும் பல்மனரி ஆகிய இரண்டு வால்வுகளும் பழுதடைந்தால், அதற்கான சிகிச்சைத் தேர்வுகள் மிகவும் குறைவு. ஏனெனில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். துல்லியமான ஸ்கேனிங், மிகச் சரியான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமாகவே, மார்பைத் திறக்காமல் கதீட்டர் முறையிலேயே பழுதடைந்த இரண்டு வால்வுகளையும் எங்களால் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது.
எங்கள் அறிவுக்கு எட்டியவரை, உலக மருத்துவ வரலாற்றில் முழுமையாக கதீட்டர் மூலம் ‘டபுள் ட்ரான்ஸ்கதீட்டர் ராஸ் ரெஸ்க்யூ’ சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வேறு வழியின்றி தவிக்கும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாற்று வழியில் மறுவாழ்வு அளிக்கும் சாத்தியக்கூறுகளை இந்த வெற்றிகரமான சிகிச்சை வெளிப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்தார்.



