தருமபுரி, ஜூன் 08 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரைம் க்ரோ சிட் மற்றும் உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவ, மாணவிகள் 70 பேருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், பேக் மற்றும் எழுது பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவும் உறவுகள் அறக்கட்டளை நிறுவனர் ராமன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிரைம் க்ரோ சிட் நிர்வாக இயக்குனர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கி, ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேக், கல்வி உபகரணங்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.
இதில் ஆச்சி மசாலா மேலாளர் சிவா, சேலம் மாவட்ட சட்ட நீதி இயக்க துணை தலைவர் மணிமொழி மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள், காப்பக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரைம் க்ரோ சிட் மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.



