நாகர்கோவில், மே 18 –
குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்யும் நோக்கில் மாவட்ட போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே அஞ்சு கிராமம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலாடி புதூர் பகுதியில் உள்ள கோவில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பிரியா ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 7 கிலோ கூல் லிப் பாக்கெட்டுகள் மற்றும் 198 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் என மொத்தம் 205 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரூ 4090 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கியதாக மயிலாடி பகுதியை சேர்ந்த செல்வகுமார் (38), மகேஷ் (51) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வகுமார் அப்பகுதியில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருபவர். மகேஷ் டிரைவர் வேலை செய்பவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



