விளாத்திகுளம், மே 11 –
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஜோசப்விஜய் வாழ்க என முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலைக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நகர செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் நகர பொருளாளர், ஒன்றிய செயலாளர்கள், இளைஞர் அணியினர், மகளிர்அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.



