நாகர்கோவில், ஜூன் 8 –
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு 2026ம் ஆண்டிற்கான மீன்பிடித்தடைக்கால நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் கே.விஜய கார்த்திகேயன் அகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணைஇயக்குநர் கோபிநாத் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் அகியோர் மீனவ மக்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 27,250 மீனவ குடும்பங்கள் தலா ரூ.8000, நாட்டுப்படகு வெளிப்பொருத்தும் இயந்திரம் ரூ.12.92 இலட்சம் மதிப்பீட்டில் 20 மீனவர்களுக்கும், 40% மானிய விலையில் 6 மீனவர்களுக்கு ரூ.1.17 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடிக்கும் போது மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2.00 இலட்சமும், இயற்கையாக மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு
27,500 மற்றும் மீனவ குடும்பங்களுக்கு கல்வி நிதியாக ரூ.1,500 வழங்கப்பட்டது. மொத்தமாக 21.96 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ந.தளவாய் சுந்தரம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா அகியோர் வாழ்த்துரை வழங்கினர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ் நன்றி கூறினார்.



