நாகர்கோவில், மே 26 –
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜோசப் மனைவி கலா (44). இவர் இன்று தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து பெருஞ்சிலம்பு என்ற பகுதிக்கு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார். சிறிது நேரம் காத்திருந்தபின் பஸ் வந்ததும் அந்த பஸ்ஸில் ஏறியுள்ளார். பஸ்ஸில் ஏறிய பின்பு தனது பையைப் பார்த்தபோது அதிலிருந்த மணி பர்ஸ் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய கலா தான் நின்றிருந்த பகுதிகளில் பர்ஸ் மற்றும் செல்போனை தேடிப் பார்த்தார். ஆனால் அவை கிடைக்கவில்லை. இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். திருட்டுப் போன செல்போனின் மதிப்பு ரூ.17,000 என்றும், பர்சில் ரூ.1650 ரொக்க பணம் இருந்ததாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கலா பஸ்ஸில் ஏறும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் அவரது பர்ஸ் மற்றும் செல்போனை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேர்தல் வேட்டை நடத்தி திருட்டில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த காயத்ரி (26), மல்லிகா (22) ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் கைதான இரு பெண்களும் கேரளாவிலும் இதுபோன்று பல இடங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் பிடிபடும் போதெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி போலீசாரை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவர்கள் வேறு எங்காவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


