நாகர்கோவில், ஜூலை 14 –
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு மலை போல் குப்பைகள் தேங்கி உள்ளது. இவைகளை பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் டெண்டர் போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனை தவிர மாநகர பகுதியில் நுண்ணுயிரி செயலாக்க மையங்கள் மூலம் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. உடனே மாநகராட்சி ஊழியர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வேகமாக வீசியதால் தீயின் வேகம் அதிகரித்தது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் தலைமையில 60 தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியை தொடங்கினர். நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனம் மற்றும் குழித்துறை, திங்கள் நகர், ராஜாக்கமங்கலம் ஆகிய தீயணைப்பு நிலையத்திலிருந்து தலா ஒரு வாகனம் என மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் கரும்புவை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றியுள்ள பீச் ரோடு, இருளப்பபுரம், வட்டவிளை, வைத்தியநாதபுரம் பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். குப்பை கிடங்கில் தீயை கட்டுப்படுத்த 3 நாட்கள் ஆகும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குப்பை கிடங்கு பிடித்த தகவல் அறிந்ததும் தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி ஆகியோர் நேரடியாக சென்று அந்த இடத்தை பார்வையிட்டனர்.



