நாகர்கோவில், ஜூலை 15 –
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று இரண்டாவது நாளாக தீப்பிடித்து எரிகிறது. தீயால் ஏற்பட்ட புகையால் வட்ட விளை ஆரம்ப சுகாதார நிலையம் பாதிப்பு அடைந்துள்ளது.
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனே மாநகராட்சி ஊழியர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வேகமாக வீசியதால் தீயின் வேகம் அதிகரித்தது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தலைமையில் 60 தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைப்பதற்கு வேண்டிய தண்ணீர் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குப்பையின் உள்ளே பிடித்து இருந்த தீயை அணைக்கும் வகையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கிளறி விடும் வேலையும் நடந்து வருகிறது. இன்று 2 வது நாளாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது காற்று கிழக்கு திசையை நோக்கி வீசுவதால் வலம்புரி விளை கிழக்கு பகுதியில் உள்ள வட்ட விளை ஊர் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக வட்ட விளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருவது வழக்கம். தற்போது இந்த கிடங்கில் இருந்து வரும் புகையால் நோயாளிகள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.


