சென்னை, டிச. 11 –
குழந்தைகளுக்கான வயிறு, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு மையம் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இம்மையத்தை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இது குழந்தைகளின் செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முழுமையாக கவனம் செலுத்தும். மாறிவரும் உணவு முறைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது மற்றும் உட்கார்ந்த நிலையிலான பணிகள் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்த மையத்தை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை திறந்துள்ளது.
இது குறித்து ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் கணையம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சோமசேகரா கூறுகையில்:- “குழந்தைகளின் குடல் மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் பெரும் கவலைக்குரியதாக மாறிவரும் நேரத்தில், சென்னையில் இந்த மேம்பட்ட குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் கல்லீரல் மையத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நகரங்களில் பிறக்கும் குழந்தைகளில் 5 பேரில் ஒரு குழந்தை அதிக எடையுடன் பிறக்கிறது. மேலும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளது. நாள்பட்ட மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காகவே இந்த மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மையத்தின் மூலம், குடல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை ஆலோசகர் டாக்டர் கீர்த்திவாசன் கூறுகையில், குடல் நோய் சம்பந்தமான அறிகுறிகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த மையத்தில் எங்கள் தனித்துவமான குழந்தை மருத்துவ எண்டோஸ்கோபிக் சேவை அறிமுகப்படுத்துகிறோம்.
மாறிவரும் உணவுமுறைகள் மற்றும் குறைந்து வரும் விளையாட்டு பழக்கங்கள்ஆகியவற்றின் காரணமாக பிறக்கும் குழந்தைகளில் பலருக்கு குடல் அழற்சி, இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை அதிகரித்து வருகிறது. எங்கள் மையத்தில் பயிற்சி பெற்ற குழந்தை மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளுக்கான நோய்களை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த சிறப்பான சிகிச்சையை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
இது குறித்து ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிற்கான மண்டல இயக்குனர் பாஸ்கர் ரெட்டி கூறுகையில், இன்று நாங்கள் திறந்துள்ள இந்த சிறப்பு மையம், வழக்கமான குடல் பிரச்சினைகள் முதல் சிக்கலான கல்லீரல் நோய்கள் வரை விரிவான, உயர்மட்ட பராமரிப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. வெற்றிகரமான குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் நீண்டகால இரைப்பை குடல் பராமரிப்பு ஆகியவற்றில் முன் அனுபவத்துடன், இந்த மையம் குழந்தைகளின் குடல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறப்பான சிகிச்சையை அளிக்கும் என்று தெரிவித்தார்.



