நாகர்கோவில், செப். 24 –
குமரி மாவட்ட அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அவர் தெரிவிக்கையில்: மழைக்காலத்தில் நீர்பாசன பகுதிகளில் உடைப்பு ஏற்ப்படாத வண்ணம் கால்வாய் கரைகளை பலப்படுத்தும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவிப்புகள் வழங்க வேண்டும். நிவாரண நடவடிக்கையின் போது மக்கள் தங்குவதற்கு தங்கும் முகாம்களை தயார்நிலையில் வைத்து, அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். கிராம நிலவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவவர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பேரிடர் காலங்களில் மனித உயிர்களை காப்பாற்ற உயர் அலுவலர்களின் ஒப்புதலை எதிர்பாராமல் உரிய நடவடிக்கை தொடங்குதல் வேண்டும்.
காவல் துறையினர் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு குழு அமைக்க வேண்டும். பேரிடரின் போது காவல் துறையினரால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காவல்துறையினர் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினரால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் போலி பேரிடர் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பேரிடரின் போது குடிநீரினை சுத்திகரித்து சுத்தமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றிணைத்து, பொதுமக்களின் பதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, உயர் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



