திருச்சி, ஜூலை 3 –
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி. இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக அணுகினார்.
அப்போது பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ.5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று பொறிவைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை சக்தி கணபதியிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் அதனை சக்தி கணபதி, பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டர் ராமமூர்த்தியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.



