கிருஷ்ணகிரி, பிப். 5 –
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அடுத்த காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவரது மகன் சத்தியகுமார் (30). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் விடுமுறையில் தனது சொந்த ஊரான காட்டுக்கொள்ளை கிராமத்திற்கு வந்துள்ளார்.
நேற்று மாலை, சத்தியகுமார் தனது மனைவி திவ்யா (29) மற்றும் மகன்கள் யாழ்வேந்தன் (5), தர்சன் (3) ஆகியோருடன் வேலம்பட்டி கிராமத்தில் வாரம் ஒரு முறை செயல்படும் வார சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு புல்லட் வாகனம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்றாயம்பட்டி கிராம பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற டூவீலர் மீது பேருந்து “”டச்” செய்ததில் புல்லட் வாகன நிலைதடுமாறி கீழே விழுந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த திவ்யா, உடனடியாக மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார், திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் காக்க வேண்டிய ராணுவ வீரர், மகிழ்ச்சியாக குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க வந்த விடுமுறை நாட்களில், மனைவியை பறிகொடுத்துவிட்டு நிற்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



