கிருஷ்ணகிரி, ஏப். 20 –
“செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் பூரிப்போடு வரவேற்பு அளிப்பதே, வரும் தேர்தலில், தி.மு.க.,வின் அமோக வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கிறது,” என மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டணம் அடுத்த மாரிசெட்டிஹள்ளி, மற்றும் பட்லப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த, 5 ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை பார்த்து, பா.ஜ., மற்றும், அ.தி.மு.க.,விற்கு பயம் அதிகரித்துள்ளது. அதை மறைக்க, பல்வேறு முயற்சிகளை மத்திய, பா.ஜ., அரசு செய்கிறது. அடிமை, அ.தி.மு.க.,வையும், சிதறி கிடக்கும் அவர்கள் கட்சியினரையும் மிரட்டி ஒரு கூட்டணிக்குள் அடைத்து பார்த்தது; மக்கள் ஏற்கவில்லை.
10,000 ரூபாய் தருகிறோம், காஸ் தருகிறோம், வீடு தருகிறோம் என்றனர் ; மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மகளிர் மசோதாவை நிறைவேற்ற தென் மாநிலங்கள் விடவில்லை என பொய் தகவலையும் பரப்பி பார்த்தனர் ; மக்கள் ஏற்கவில்லை. மகளிர் விடியல் பயணம், உரிமைத்தொகை, புதுமைப்பெண், அன்புக்கரங்கள், நான் முதல்வன், மகளிர் சுய உதவிக்குழுக்கடன் என பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மட்டுமே பெண்கள் ஏற்று கொண்டுள்ளனர்.
தொகுதிகள் தோறும், செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் பூரிப்போடு வரவேற்பு அளிப்பதே, வரும் தேர்தலில், தி.மு.க.,வின் அமோக வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கிறது. சொன்னதை செய்வது, தி.மு.க., அரசு என அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அவர்கள் தற்போது கேட்கும் கோரிக்கைகளை செய்து கொடுத்தாலே இன்னும் 10 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் என்பதை மக்கள் சொல்லாமல் சொல்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.



