தென்தாமரைகுளம், ஜூன் 5 –
கன்னியாகுமரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவரை கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நேரத்தில் மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி பாபு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அம்மனுவில்: கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியானது 4.85 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட முதல்நிலை பேரூராட்சியாகும். மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கல் தொழில் ஆகும். சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையும் ஏதும் இல்லை. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் தேவைக்கு பேருந்து மூலம் பிற இடத்திற்கு சென்று தான் மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்கைள், மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் கல்சிற்பத்தொழில் பெருமளவு நடைபெற்று வருவதால் சுமார் 3000 குடும்பங்களுக்கு மேல் கல்தொழில் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் அவர்களுக்கு மூச்சு பிரச்சனை, காசநோய் ஆகிய நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. கல்தொழில் செய்து வரும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலைமை உள்ளது. இதனால் மிகவும் இன்னலுற்று அருகிலுள்ள வேறு இடங்களுக்கு சென்றுதான் மருத்துவ வசதி பெறும் நிலையும் இருந்து வருகிறது.
பேரூராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் மெயின்ரோட்டில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே இந்த இடத்தில் பொதுசுகாதார துறைக்கு நிலம் மாற்றம் செய்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



