சென்னை, ஜன. 22 –
தி மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பௌண்டேஷன் (எம்.இ.ஆர்.எப்). ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் (ஏ.பி.ஐ.) சிகிச்சையை வழங்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய முன்னோடி மையங்களில் ஒன்று. இதுவரை இதுபோன்ற 100 சிகிச்சைகள் இங்கே நடைபெற்றுள்ளன. 2009இல் சிறுவர்களுக்கான முதல் ஏ.பி.ஐ. சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 100வது சிகிச்சை முடிந்துள்ளது. இது தான் ஆசியாவில் மட்டுமல்லாது உலகத்திலேயே அதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட மையமாகும்.
ஏ.பி.ஐ என்பது மிகவும் நவீனமான, நுட்பமான சிகிச்சை முறையாகும். இதனை 12 மாதக் குழந்தைகள் முதல் அனைத்து சிறுவர்களிடமும் மேற்கொள்ள முடியும். தி மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பௌண்டேஷனின் முதல் ஏ.பி.ஐ. சிகிச்சை 2004இல் 13 வயது சிறுமிக்குச் செய்யப்பட்டது. அந்த சிறுமிக்கு மூளையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ஒலி நம்புகள், கட்டி ஒன்றினால் பழுதுபட்டு, காதுகேட்கும் திறன் பறிபோயிருந்தது.
தி மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் பௌண்டேஷனின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆலோசகரும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சையில் தலைமை நிபுணருமான பேரா. டாக்டர் மோகன் காமேஸ்வரன் பேசும்போது, “பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளில், 25 சதவிகிதம் செவித்திறன் தொடர்பானது. அதனை பல்வேறு செயற்கை உறுப்புகளைப் பொருத்திச் சீர்செய்ய முடியும் . காக்ளியர் இம்ப்ளான்ட் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் சிகிச்சை முறையாகும் அது. கடுமையான செவித் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் கேட்கும் திறனை மீட்டுத் தந்துள்ளது. ஆனால், அந்தச் சிகிச்சை பலன் தருவதற்கு உள்காதின் வடிவமும் நரம்புகளும் வலுவாக இருக்க வேண்டும்.
உள் காது அல்லது ஒலிநரம்பு இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட் பலன் தராது. இங்கே தான் ஆடிட்டரி முளைத்தண்டு இம்ப்ளான்ட் (ஏ.பி.ஐ) என்ற மிக நவீனமான சிகிச்சை முறை பயன் அளிக்கும். ஆசியாவிலேயே இத்தகைய சிகிச்சையை செய்திருக்கிறோம் என்பது பெருமையாக இருக்கிறது” என்றார்.
ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் (ஏ.பி.ஐ.) என்பது ஓர் உயிரி-இயந்திரக் கருவியாகும். இதன் உட்புறப் பகுதியான எவக்ட்ரோடு, முளையின் செவித்திறன் கொண்ட பகுதியான காக்ளியர் நியூக்ளியஸ் என்ற பகுதிக்கு மேல், மூளைத்தண்டில் பொருத்தப்படும் .இக்கருவியின் வெளிப்புறப் பகுதி காதுக்குப் பின்னே பொருத்தப்படும். இந்தக் கருவி, ஒலியை மின் சமிக்ஞைகளாக மாற்றி, உள் காது மற்றும் ஒலி நரம்பை விலக்கிவிட்டு, நேரடியாக மூளைத்தண்டில் இருக்கும் காக்ளியர் நியூக்ளியஸுக்கு அனுப்பிவைக்கும் என்று வி.எச்.எஸ் மருத்துவமனையின் தலைமை நரம்பியல் மருத்துவரான டாக்டர் எம். சி. வாசுதேவன் விளக்கினார்



