தருமபுரி, ஆகஸ்ட் 06 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் இரசாயனம் கலந்த கழிவுநீரால் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த இரசாயன கழிவுநீரால் விவசாய நிலங்களில் கலந்து பாதிப்படைந்துள்ளது.
இந்த நிறுவனத்தைச் சுற்றி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் மற்றும் பலவகை பயிர் வகைகள் விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகள் இரசாயனம் கலந்த நிலத்தடி நீரால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த பயிர் வகைகள் அனைத்தும் நிலத்தடிய நீர் மாசு அடைந்துள்ளதால் கருகி வருகிறது. மேலும் கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் இந்த இரசாயனகழிவுநீர் கலக்குவதால் குடிநீர் பாதிப்படைந்துள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த குடிநீரை குடித்து உடல் பாதிக்கப்பட்டள்ளது.
மேலும் மகேந்திரமங்கலம் ஊராட்சி பகுதியில் இந்த இரசாயனகழிவுநீர் கலந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததால் இந்த பகுதியில் சுமார் 10 கால்நடைகள் இறந்துள்ளன. இந்த இரசாயன கழிவுநீரால் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கை, கால்களில் தோல் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், சிறுவர்கள் நாலு பேருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியப்பட்டு தருமபுரி உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும். மேலும் விவசாய நிலங்களை இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் P.K. சிவா, S.P.நாகராஜ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



