நாகர்கோவில், மே 27 –
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யாமல் நெல்மணிகளை கொள்முதல் செய்யும் நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும்போது மூடைக்கு இவ்வளவு பணம் என்று லஞ்சம் வாங்கக்கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தது. ஆனால் நெல் கொள்முதல் செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் இடையூறால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் கொள்முதல் செய்யாமல் நெல்மணிகள் மழை நனைந்து அழிந்து வருகிறது.
இதனால் மே மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று 27-ம் தேதி நடந்த நிலையில் டிராக்டர்களில் நெல்மணிகளை கொண்டு வந்த விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர்.
அது தொடர்பாக மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட நுகர் பொருள் வாணிப கழக அதிகாரி தவறான தகவலை தெரிவித்து இருந்தார். உடனே பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் தாணு பிள்ளை உட்பட பலர் மேற்படி அதிகாரி தவறான தகவலை தெரிவித்ததாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்.
உடனே மாவட்ட ஆட்சியர் மேற்படி வாகனத்தில் இருந்த நெல் மணிகளை கோட்டாட்சிய தலைமையில் ஆய்வு செய்ய கூறியபடி ஆய்வு செய்தனர். மேலும் மாலை 3 மணி அளவில் சம்மந்தப்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு இருக்கும் நெல்மணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் அப்போது சமரசம் ஆகி சென்ற நிலையில் நெல் கொள்முதல் செய்யவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.
பின்னர் கலெக்டர் அறிவித்தபடி சென்பராமன்புதூர் பகுதியில் உள்ள நெல் குடோனிலலுள்ள நெல்லை
நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி ஆய்வு செய்தார்.
உடன் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கீதா, மாவட்ட நீர்ப்பாசன சேர்மன் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் சேர்மன் சகாயம், பாசனத்துறை மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணு பிள்ளை, முருகேசபிள்ளை , அருள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.



