தருமபுரி, ஜூன் 22 –
தருமபுரியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெறும் நீட் தேர்வை எழுத உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள என்டடப்ட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களின் மகள் ரோஷ்ணி (18), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் +2 முடித்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். நீட் தேர்விற்கு சொந்த ஊருக்கு வந்த மாணவி தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுத இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ரோஷனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவி கடிதம் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா? தேர்வு அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பன குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



