நாகர்கோவில், செப். 1:
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில இடம்பிடித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை, கன்யாகுமரி மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு சார்பில் நேரில் சந்தித்து பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கன்யாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.டி. சுரேஷ் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சக்திபிரசாத் முன்னிலை வகித்தார்.
குலசேகரம் அரசுமூடு பகுதியைச் சேர்ந்த தர்ஷினி விபின், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், குலசேகரத்தைச் சேர்ந்த சஞ்சய், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில தேர்வாகியுள்ளனர்.
அதேபோல், பத்மநாபபுரத்தைச் சேர்ந்த அக்ஷரா, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மணக்காவிளையைச் சேர்ந்த சஞ்சனா, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில இடம்பிடித்துள்ளனர்.
மருத்துவக் கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து பாஜக நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.



