நாகர்கோவில், ஏப். 27 –
கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு நாகர்கோவில் திருநெல்வேலி கோவில்பட்டி, மதுரை, சேலம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்றடையும். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் இரவு 8 36 மணியளவில் இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது.
ஏற்கனவே தேர்தலுக்காக வாக்களிக்க வந்தவர்கள், விடுமுறைகள் முடிந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த ரயிலுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். வழக்கமாக இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 1வது பிளாட்பாரத்தில் தான் வந்து நிற்கும். ஆனால் நேற்று முன்தினம் இந்த ரயில் இரவு 8. 50 மணியளவில் 2வது பிளாட்பாரத்திற்கு வந்தது.
ஆனால் பெட்டிகளில் கதவு திறக்கப் படாததால் பயணிகள் ரயிலில் ஏற மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தனர். வழக்கமாக ஐந்து நிமிடங்கள் நிறுத்தப்படும் இந்த ரயில் அன்று 3 நிமிடத்தில் புறப்பட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நூற்றுக்கணக்கான பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் தவித்த நிலையில், ரயில் புறப்பட்டதால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
இதற்கிடையில் ஒரு சிலர் ரயிலில் சங்கிலியை பிடித்து நிறுத்தினார். தொடர்ந்து ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. சில பயணிகள் ரயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் கூறுகையில் வழக்கமாக ரயில் சுத்தம் செய்து முடித்து கிளம்பும்போது ரயில் பெட்டிகளை பரிசோதனை செய்து கதவுகளை முறையாக திறந்து வைக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் ரயில் கதவுகளை திறக்காததால் ல் பயணிகள் ஏற முடியவில்லை. இந்த பிரச்சனை இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அதிகாரிகள் கூறினார்கள். இதை அடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறினார்கள். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டு சென்றது.



