தருமபுரி, செப்டம்பர் 12 –
தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் பாரத ஸ்டேட் பாங்க், கனரா பேங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா, எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் கலந்து கொண்டன. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் கலந்து கொண்டு 40 மாணவர்களுக்கு ரூ.3.90 கோடி கல்வி கடன்களை வழங்கி பேசுகையில்: கல்விக் கடனுதவி பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்கள் தங்கள் கனவுப் படிப்பை தொடர நல்வாய்ப்பாகும்.
அதிகக் கட்டணமுள்ள பாடப்பிரிவுகளான மருத்துவம், பொறியியல், வெளிநாட்டு கல்வி போன்றவை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடன் ஒரு பெரிய ஆதரவாக இருக்கும். இதன் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு தருமபுரி மாவட்டத்திற்கு 1,500 மாணவர்களுக்கு 40 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதோடு நிற்காமல் 3 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க கேட்டு கொண்டார்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் இலக்கை அடைய கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிட்டு இன்று முதல் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாமில் தேவையான ஆவணங்கள் வைத்திருக்கும் மாணவர்கள் கடன் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை களைய வங்கி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 553 மாணவர்களுக்கு கல்விக்கடனாக 12.06 கோடி ரூபாய் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 310 மாணவர்களுக்கு 12.33 கோடி ரூபாய் கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து கல்விக்கடன் முகாம்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் வட்ட அளவில் நடத்தப்படவுள்ளது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்த முகாமில் வருவான் வடிவேலன் கல்லூரியின் நிறுவனர் வடிவேலன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் வங்கிகளின் மேலாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



