நாகர்கோவில், மே 18 –
நாகர்கோவில் – கன்னியாகுமரி ரயில் பாதையில் காக்கமூர் ரயில்வே கேட் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டார். திப்ருகார் விரைவு ரயிலின் காலிப் பெட்டிகள் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றபோது அவர் ரயிலில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார் என்பது பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவர் சுசீந்திரம் தெற்குமண் என்ற பகுதியை சேர்ந்த சசிதரன் நாயர் (74) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சசிதரன் நாயர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


