நாகர்கோவில், ஜூலை 1 –
கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்புருகருக்கு தினமும் ரயில் ஏற்பட்டு வருகிறது. பர்மார்க்கத்திலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று இரவு கன்னியாகுமரிக்கு வந்த திப்ருகார் ரயில் பின்னர் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள யார்டு க்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அந்த ரயிலின் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பொட்டலம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ரயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் யார்டு பகுதிக்கு விரைந்து சென்று ரயில் பெட்டியில் அந்த பையை பார்வையிட்டனர். பின்னர் அதனை சோதனை செய்ததில், 6 பார்சல் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் மொத்தம் ஐந்து கிலோ கஞ்சா அந்த பைகளில் இருந்து சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கஞ்சா அவர்களிடம் கஞ்சா பார்சல் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் கடத்திவரப்பட்ட 15 கிலோ கஞ்சா ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



