நாகர்கோவில், ஜூலை 30 –
தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பாரதிய கிசான் சங்கம் (தமிழகம்) சார்பில் இன்று நாகர்கோவிலில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் எவ்வித நிபந்தனைமின்றி உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை மற்றும் தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 60 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பது உறுதி செய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை உணவு எண்ணெயாக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள கோக்கனட் ப்ரோமோஷன் ஸ்கீம் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து சலுகைகளும் தடை இன்றி கடைக்கோடி விவசாயிகளுக்கும் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயத்துறை, உணவுத்துறை மற்றும் வருவாய் துறையாக இவற்றை இணைத்து ஒரு கூட்டு மேலாண்மை அமைப்பை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்டம் பொருளாளர் ராமதாஸ், மாநில தலைவர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் முருகன், மாநில அமைப்பாளர் குமார், தென்காசி மாவட்ட தலைவர் ஹரிரங்கநாதன், சிவனயா, பெரியசாமி, ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



