தருமபுரி, மே 29 –
தருமபுரி மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் தடுக்க சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சாலைகளில் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதை தடுக்க தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
சாலை விதிகளை முறையாக பின்பற்றி எதிர்பாராத விதமாக நடக்கும் சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்து போக்குவரத்து துறை, காவல் துறை உள்பட தொடர்புடைய துறை அலுவலர்களும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
விபத்துகளை தவிர்க்க அபாயகரமான வளைவுகள், போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புக்களில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் மற்றும் சாலை விதிகளை தொடர்ச்சியாக மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா உள்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



