நாகர்கோவில், ஜூலை.5 –
குமரியின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சாலையின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் நல்ல திட்டமாக இருந்தாலும் கூட, இதே பகுதிகளில் இருசக்கர வாகன ஒட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அபராதமும் விதித்து வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மாநகரில் வேப்பமூடு, மணிமேடை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பார்க்கிங் வசதி மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செட்டிக்குளம் சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட இடங்களில் எவ்விதமான பார்க்கிங் வசதியும் இல்லை. இதன் காரணமாகவே மக்கள் இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டிய கட்டடாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
ஆகவே நாகர்கோவில் மாநகரில் ‘மினி பார்க்கிங் வசதி’ அமையுமா?? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தாலும் கூட, அவர்களுக்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும். மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கையாக உள்ளது.



