மயிலாடுதுறை, ஜூலை 25 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரிழந்தூர் கீழையூர் கிராமத்தில் பொன்னம்மா காளியம்மன் ஆலய ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆற்றங்கரைகளில் இருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதே போல் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு காவேரி நகர் காவேரி அம்மன் ஆலய பால்குட காவடி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.