தென்தாமரைகுளம், மார்ச் 31 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள ஒரு கோவிலின் பின்புறம் புதரில் பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தையை வீசி சென்ற நர்சிங் மாணவியை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுகிழமை பொற்றையடி அருகே உள்ள கரம்ப விளையில் ஒரு கோவிலின் பின்புறம் புதரில் சில மணி நேரமான பெண் குழந்தை ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் குமார் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து ராஜேஷ்குமார் தென்தாமரைகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை புதரில் வீசி சென்றது யார் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையை புதரில் போட்டு விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்தக் குழந்தையை வீசி சென்றது யார் என்ற தகவல் போலீசருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: குழந்தையை புதரில் வீசி சென்றது யார் என விசாரணை நடத்தியதில் அந்தக் குழந்தையை போட்டது கரம்பவிளையை சேர்ந்த பாலன் என்பவரது மகள் ரெஜினா (20) என்பது தெரியவந்தது. இவரது தந்தை இறந்து விட்டார். மேலும் விசாரணை நடத்தியதில் அவர் நர்சிங் படித்து வருவதாகவும், இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்த முகேஷ் (25) என்பவருக்கும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கரம்பவிளையில் உள்ள வீட்டில் கழிப்பறையில் வைத்து பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து முகேஷ்க்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் இந்த குழந்தை நமக்கு வேண்டாம். அதை வெளியில் எங்காவது போட்டுவிட்டு வந்துவிடு. நாம் இருவரும் எங்கேயாவது போய்விடுவோம் என முகேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை ஒரு பக்கெட்டில் வைத்து கோவிலின் பின்புறத்தில் உள்ள புதரில் போட்டுவிட்டு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று திங்கள் கிழமை அவர்கள் இருவரும் வேறு இடத்திற்கு தப்பி செல்ல முயன்ற போது ஈத்தங்காடு அருகே வைத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.



