தென்காசி, மே 9 –
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே அமைந்துள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டதும், சுமார் 150 வருடங்கள் பழமையானதுமான சங்கிலி பூதத்தார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கிலி பூதத்தார், சங்கிலி மாடன், சிவன் பார்வதி உள்ளிட்ட 21 தெய்வங்கள் வீற்றியுள்ள நிலையில் வருடம் தோறும் சித்திரை கொடை விழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று சித்திரை கொடை விழா தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. நெடுவயல் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து இரவு பொங்கலிடம் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.



