தஞ்சாவூர், ஏப்ரல் 24 –
சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் செஹரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான பா.பிரியங்கா பங்கஜம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,54,204 ஆண் வாக்காளர்கள், 1 0,12,642 பெண் வாக்காளர்கள், 156 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 19,67,002 வாக்காளர்களுக்கு 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2501 வாக்குச்சாவடி நிலையங்களிலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 வியாழக் கிழமை நடைபெற்றது.
வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பணிகளில் 12004 வாக்குச்சாவடி அலுவலர்கள், 101 தேர்தல் நுண் பார்வையாளர்கள், 210 மண்டல அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 1300 காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 15,86,625 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 80.63 % ஆக பதிவாகியுள்ளது.
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 80.78 சதவீத வாக்குகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 81.04 சதவீத வாக்குகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 80.34 சதவீத வாக்குகளும், திருவையாறு சட்டமன்ற தொகுதியில் 85.19 சதவீத வாக்குகளும், தஞ்சாவூர்
சட்டமன்ற தொகுதியில் 77.47 சதவீத வாக்குகளும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 82.98 சதவீத வாக்குகளும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 75.42 சதவீத வாக்குகளும், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 81.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.05.2026 (திங்கட் கிழமை) அன்று நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தினை பொறுத்த வரையில், திருவிடைமருதூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமாக கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியும் (தன்னாட்சி), திருவையாறு,தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியும் (தன்னாட்சி) மற்றும் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் 23.04.2026 முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.05.2026 வரையில் 24 மணிநேரமும் காவல் துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்பிரிவு பாதுகாப்பு காவல் துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததிலிருந்து வாக்கு எண்ணும் நாள் வரை அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தில் 24 மணிநேரமும் தங்கி பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கண்ட பணியினை பார்வையிடவும், கண்காணிக்கவும் வட்டாட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



