கன்னியாகுமரி, ஜூலை 8 –
கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக சில விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்ற விவகாரத்தில் இருதரப்பு மீனவரிடைய கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் இருதரப்பை சேர்ந்த தலா 7 பேர் வீதம் மொத்தம் 14 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனையால் இன்று புதன்கிழமை 3வது நாளாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் முடக்கம் ஏற்பட்டு, கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளாகத்தில் நேற்று மாலை திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேர கட்டுப்பாட்டை மீறி மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையால் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், இந்த தடை காரணமாக கன்னியாகுமரியை சேர்ந்த 15 ஆயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள், காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரத்தில் இன்று மீண்டும் இருதரப்புகளிடையே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. பின் இருதரப்பை சேர்ந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாக கன்னியாகுமரி சின்ன முட்டம் மீனவர் கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


