தஞ்சாவூர், ஏப். 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார். பள்ளி திறக்கும் முதல் நாளில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் வழங்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாட புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
தஞ்சாவூர் மேம்பாலம் அரசு பள்ளி வளாகத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் நகரம், புறநகர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம், மதுக்கூர், பேராவூரணி, திருவோணம், பூதலூர் உள்ளிட்ட 9 வட்டாரங்களை சேர்ந்த 197 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தப் பணியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேபி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து சில நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் சென்றடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் உடன் இருந்தார்.
மேலும் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 வட்டாரங்களிலும் இதே போல் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி ஒரே நேரத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



