மார்த்தாண்டம், டிச. 13 –
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 76 வது திருத்தலம் ஆகும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பெருமாள் 22 அடி நீளத்தில் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் நூற்றுக்கணக்கான கல் தூண்கள் காணப்படுகின்றன. இந்த கல் தூண்களில் வேணுகோபாலன், மத்தளம் கொட்டும் ஆண், சதுர் தாண்டவ நிலையில் பெண் உட்பட பாரம்பரிய மிக்க பல சிற்பங்கள் உள்ளன.
இதில் ஸ்ரீ பலி மண்டபத்தில் உள்ள யாளி சிற்பம் தும்பிக்கை மற்றும் கீழ் பகுதியில் சவாரி செய்யும் வீரனின் சிற்பம் உடைந்து 15 நாட்கள் ஆகியும் பழமை மாறாது சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்று அதன் எதிர் புறத்தில் உள்ள யாளி சிலை தும்பிக்கை உடைந்ததை பக்தர்களிடம் இருந்து மறைத்து சிமெண்ட் கலவை வைத்து பூசி இந்து அறநிலையத்துறை பக்தர்களை ஏமாற்றி வருவதாகவும், இதை கண்டித்து இந்து முன்னணி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்து உள்ளது.
மேலும் கோயில் நகைகளை உருக்கி வியாபாரம் நோக்கில் இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாகவும், சட்ட மன்றத்தில் ஆதிகேசவ பெருமாளுக்கு பத்து கிலோவில் தங்க அங்கி செய்யபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருடங்கள் தாண்டிய பிறகும் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் குற்றம் சாட்டி உள்ளார். சேதமடைந்த யாளி சிலையை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்த பிறகு அவர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் ஜி, நெல்லை கோட்டச் செயலாளர் ஆர்.கே. கண்ணன், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், இந்து முன்னணி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், பாரதிய ஜனதா கட்சி தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் உட்பட பல இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



