மார்த்தாண்டம், ஜூன் 26 –
திருவட்டாறு அருகே உள்ள செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ரிங்கிள் ஜெயக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா சுனிதா. இவர்களுக்கு 15 வயதான ரினோஷியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ரினோஷியா அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பு வந்தார்.
இதற்கிடையில் நிர்மலா சுனிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அவரது மறைவுக்கு பிறகு ரிங்கில் ஜெயக்குமார் தனது இரண்டு குழந்தைகள் உடன் அதே வீட்டில் வசித்து வந்தார். தாயின் இறப்பு மகள் ரினோஷியாவை மிகுந்த மன வேதனை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தாயை மறக்க முடியாமல் தவித்த அவர் தாங்கள் வசித்து வரும் வீட்டை விட்டு வேறு இடத்தில் செல்ல வேண்டும் என்று தந்தை இடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் ரிங்கிள் ஜெயக்குமார் நேற்று வேலைக்கு வெளியில் சென்று விட்டார். பள்ளிக்கு சென்றிருந்த மாணவி ரினோஷியா மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். தந்தை வெளியே சென்றிருந்ததால் வீட்டில் பின் வாசல் பகுதியில் உள்ள கொக்கியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த தந்தை ஜெயக்குமார் மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரினோஷியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஜெயக்குமார் திருவட்டாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தாயின் மறைவால் ஏற்பட்ட பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


