மார்த்தாண்டம், ஜூன் 24 –
திருவட்டார் அருகே அருவிக்கரைப் பகுதியில் பரளியாறு பாய்ந்து செல்கிறது. அந்த ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளிக்க வந்துள்ளார். அது தடை செய்யப்பட்ட பகுதியாகும். மிகவும் ஆபத்தான அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் யாரும் அந்த பகுதிக்கு செல்வதில்லை. ஆனால் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது நண்பருடன் அந்தப் பகுதியில் குளித்து அந்த புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட்டு இருந்தார். ஆபத்தான பகுதியில் நண்பர்கள் புடை சூழ அஸ்வின் குளிக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக அருவியின் அழகைப் படம் பிடிப்பதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யுடியூபர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிக அளவில் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் அருவிக்கரை பகுதியில் பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த பாறையில் சறுக்கல் அதிகம். இதனால் பல விபத்துகள் நடந்து வருடம் தோறும் வெளியூர் சுற்றுலா பயணிகள் 10 பேராவது சறுக்கி விழுந்து உயிரிழந்து வருவது வழக்கம். மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் உள்ளூர் மக்கள் இந்த பகுதியில் குளிக்க இறங்குவதில்லை. ஆனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் தன் நண்பருடன் வந்து குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தற்போது பலர் இங்கு படம் பிடித்து செல்கின்றனர். ஆபத்தான பாறைகளில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். விரைவில் இங்கு ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும் என மாவட்ட எஸ் பி-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார்கள். அருவிக்கரை பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான வருஷம் 16 என்ற தமிழ் சினிமா படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அருவிக்கரையை பார்க்க பல சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் பாதுகாப்பு இல்லாத பாறைகளில் ஏறி போட்டோ எடுக்கும் போது பல சுற்றுலா பயணிகள் சறுக்கி விழுந்து உயிரிழக்க நேரிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.