கிருஷ்ணகிரி ஜூன் 12: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் கிராமத்தில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி, பின்னர் ஆட்டை வெட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், நடந்து கொண்ட திமுக, திக சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் புகார் அளித்து பல நாட்கள் ஆகியும், நடவடிக்கை எடுக்காத காவல் துறையின் போக்கை கண்டித்து சாகும் வரை மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் K.கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் காவேரிப் பட்டினம் பேருந்து நிலையம் வந்தனர். அங்கு ஏற்கனவே காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு, காவல் துணை கண்காணிப்பாளர் தமிழரசி தலையிலான போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்தராஜ் எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையை அவமதிக்கும் வகையில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி ஆட்டை வெட்டி ரோட்டில் இழுத்து சென்று, கொலை மிரட்டல் விடுத்த திமுக, தி.க சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்து ஒரு வாரம் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுவது மட்டுமின்றி, இங்கு நிற்கவும் கூடாது என விரட்டுகின்றனர். எங்கள் தலைவரை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் பாஜகவினர் ஈடுபட்டாதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட துணை தலைவர் ஜெயலட்சுமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் தீர்த்தம், மண்டல செயலாளர் மோகன், மண்டல் தலைவர் ராணா, கேசவன், மண்டல் பொதுச் செயலாளர் பசுபதி, அரசு தொடர்பு மாவட்ட துணை தலைவர் மாயக்கண்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் அப்போது உடன் இருந்தனர். முன்னெச்சரிக்கையாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் பையூரில் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். டிஎஸ்பி தமிழரசி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியது அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்



