திருப்பத்தூர், ஜூன் 29 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 483 கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,285/- மதிப்பிலான காதொலி கருவி, 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ 8,000/- மதிப்பிலான சக்கர நாற்காலி, 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,500/- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி, 05 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.14,500/-மதிப்பிலான கைத்திறன்பேசி என மொத்தம் 06 நபர்களுக்கு ரூ.93,265/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருபூஷணகுமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மகாதேவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.



