ஈரோடு, மார்ச் 26 –
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12.66 ஏக்கர் நிலத்தை சி.எஸ்.ஐ நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோவில் நிலத்தை மீட்டு 80 அடி சாலை விரிவாக்கம் மற்றும் கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணித்து வரகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு மற்றும் பல்வேறு இடங்களில் திமுக அரசு இந்து விரோத போக்கை வெளிப்படுத்தி வருகிறது.
பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஏப்ரல் 2ம் தேதி 10,008 பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட தீர்த்த அபிஷேக ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ‘இந்து விரோத திமுகவை தோற்கடிப்போம்’ என்ற துண்டுப் பிரசுரங்கள் மூலம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இ்ந்து முண்ணனி மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.



