நாகர்கோவில், ஜூன் 24 –
குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்திடவும் பொது நலன் கருதி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு மனு அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்.
அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கியப் பகுதியாக திக்கணங்கோடு விளங்கி வருகிறது. இப்பகுதி பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் எல்லையாகவும், மக்கள் அதிகம் கூடும் முதன்மைச் சந்தைப் பகுதியாகவும் அமைந்துள்ளது.
திக்கணங்கோடு சந்திப்பானது, நாற்புறமும் முக்கிய நகரங்களை இணைக்கும் மையப் புள்ளியாக உள்ளது. இங்கிருந்து குளச்சல் 5.4 கி.மீ, கருங்கல் 4.2 கி.மீ, திங்கள்நகர் 4.7 கி.மீ மற்றும் தக்கலை 7.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பின் காரணமாக, திக்கணங்கோடு சந்திப்பில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் கடந்து செல்கின்றன.
தற்போதைய முக்கியப் பிரச்சினைகள்: இப்பகுதியில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மிக முக்கியமாக, அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் அவல நிலை நீடிக்கிறது. மேலும், இப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் விசேஷங்கள் நடைபெறும் நாட்களில், சுமார் 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது.
எனவே, திக்கணங்கோடு சந்திப்பில் நிலவும் இந்த மிக முக்கியமான போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு, பின்வரும் கோரிக்கைகளைத் தங்களின் கனிவான கவனத்திற்குச் சமர்ப்பிக்கிறோம்: கருங்கல் மார்க்கப் பேருந்து நிறுத்தம் மாற்றம்: திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கருங்கல் மார்க்கமாகச் செல்லும் பேருந்து நிறுத்தத்தை, தற்போதைய இடத்திலிருந்து சுமார் 50 முதல் 100 மீட்டர் தொலைவிற்கு நகர்த்தி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளச்சல் மார்க்கப் பேருந்து நிறுத்தம் மாற்றம்: அதேபோல், குளச்சல் மார்க்கமாகச் செல்லும் பேருந்து நிறுத்தத்தையும் சுமார் 25 முதல் 40 மீட்டர் தூரம் மாற்றி அமைத்து, பாலத்திற்கு அருகே கொண்டு செல்ல வேண்டும்.
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்: திக்கணங்கோடு சந்திப்புச் சாலையின் நாற்புறமும் உள்ள சில வியாபாரிகள், நெடுஞ்சாலைப் பகுதியை ஆக்கிரமித்துக் கடைகளை அமைத்துள்ளனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை சார்பாகச் சந்திப்பிலிருந்து நான்கு திசைகளிலும் செல்லும் சாலைகளில், சுமார் 100 முதல் 300 மீட்டர் தூரம் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
சென்டர் மீடியன் (Center Median) அமைத்தல்: சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, சந்திப்பிலிருந்து நான்கு மார்க்கங்களிலும் சுமார் 100 முதல் 300 மீட்டர் நீளத்திற்குச் சாலையின் நடுவே ‘சென்டர் மீடியன்’ (Center Median – தடுப்புச் சுவர்) அமைத்துத் தர வேண்டும்.
சாலையில் தற்போது உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைக்காத பட்சத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் பொருட்டு திக்கணங்கோட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், திக்கணங்கோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும். எனவே, மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் இக்கோரிக்கைகளை உடனே பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


