நாகர்கோவில், ஜூலை 23 –
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து தலைமையாசிரியர்களிடையே கலந்துரையாடி கூறியதாவது: மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்க நடைபெற்றது. பள்ளியின் வளர்ச்சிக்குத் தலைமை ஆசிரியர்களே தூணாக விளங்குகிறார்கள். ஒரு பள்ளியின் தரம் உயருவது தலைமை ஆசிரியரின் நிர்வாகத் திறமையைப் பொறுத்தே அமைகிறது.
எனவே, தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்களுடனும் நல்லுறவை பேண வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கத்தின் வாயிலாக மாணவர்கள் கல்வி தொடர்பான மற்றும் சினிமா தொடர்பான விஷயங்கள் என அனைத்தையும் 30 விநாடி, 1 நிமிடத்திற்குள் கற்றுக்கொள்கிறார்கள்.
எனவே தற்போதைய மாணவர்கள் குறுகிய நேரத்திலேயே விஷயங்களைப் புரிந்து கொள்ள விரும்புவதால், ஆசிரியர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்பத் தங்களின் கற்பித்தல் முறைகளை மாற்றி, மாணவர்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் கற்பித்தல் வேண்டும். தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை சார்பில் ஸ்டீம் என்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்த கல்வி முறையின் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



