தருமபுரி, மார்ச் 21 –
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தருமபுரி மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி – கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் தருமபுரி மாவட்ட தலைமை ஹாஜி பதல கரீம் கலந்து கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் ஜப்பார், நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து மசூதிகளின் ஐக்கிய ஜமாத் மாநில துணை செயலாளருமான எக்பால், தலைவர் முனவர் ஜான், பொருளாளர் முஸ்தாக், துணை தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த சிறப்பு தொழுகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாலக்கோடு – பென்னாகரம் இதேபோன்று தருமபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு , முகமதுஅலிகிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி. ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், மாரண்டஹள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினர்.
இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்கள் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது. ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.



