தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரி மாவட்டம் அரியாகுளத்தில் நிஜாமுதீன் (68) என்ற விவசாயி பயிரிட்டு, கடும் வறட்சியிலும் அமோக விளைச்சலை பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் பேரிச்சை பண்ணையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பேரிச்சை கன்றுகளை இறக்குமதி செய்து, தன் நிலத்தில் பயிரிட்டார். சில ஆண்டுகளில் நல்ல விளைச்சல் கிடைத்ததை தொடர்ந்து, அவருடைய நிலத்தில், 15 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார். அதில் பர்ரி, கான்ஜி, நுார் போன்ற திசு வளர்ப்பு செடி, தருமபுரியின் கடும் வறட்சியை தாங்கி நல்ல விளைச்சலை தந்துள்ளது.
நிஜாமுதீன் கூறியதாவது: ஒரு கிலோ பேரிச்சை பழம் ரூ. 200 முதல், ரூ.600 வரை மொத்த வியாபாரிகள், பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். இந்த மரங்கள் 90 ஆண்டுகள் வரை காய்க்கும் தன்மை கொண்டது. பேரிச்சை சாகுபடியை ஊக்கப்படுத்த தமிழக அரசு மானியத்தை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



