தருமபுரி, ஜூலை 27 –
தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேலத்தில் இருந்து தொப்பூர், தருமபுரி, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பயணிகள் (பேசஞ்சர்) ரயில் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை சுமார் 7.15 மணியளவில் தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையை வந்தடைந்தது. அப்போது ரயிலின் ஐந்தாவது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகையுடன் தீப்பொறிகள் பறந்து தீ எரிவதை சில பயணிகள் கவனித்தனர்.
உடனடியாக இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ரயிலின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரேக், சக்கரத்துடன் ஒட்டிக்கொண்டதால் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக ரப்பர் பகுதி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. பயணிகளின் சாமர்த்தியமும் , ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையின் காரணமாக பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் ரயில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பழுது சரி செய்யப்பட்டு பிறகு சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த திடீர் தீ விபத்து காரணமாக தருமபுரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



