தருமபுரி, ஜுன் 11 –
தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்புப்படை செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் துவக்கி வைத்தார். இது குறித்து சிங்கப்பெண் சிறப்புப் படையில் உள்ள சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி கூறியதாவது: சிங்கப்பெண் சிறப்புப்படை பணியை தொடங்கி உள்ளோம். இதற்காக எங்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த படையில் 2 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 பெண் காவலர்கள் மற்றும் 2 டிரைவர்கள் இடம்பெற்று இருக்கிறோம்.
காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரையும் என தினமும் இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிது. குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் குற்ற செயல்களை முன்கூட்டியே தடுப்பது ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். இதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் மற்றும் பணிகளுக்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
மேலும் 100, 1098 உள்பட கட்டணமில்லா தொலைபேசி எண்களில் அவசர உதவி கேட்டு பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகளை பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.



