தருமபுரி, பிப்ரவரி 17 –
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். தருமபுரி அருகே சோகத்தூர் ஏ. ரெட்டி அள்ளி பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஐந்தாம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. திடீரென மாற்றப்பட்டதால் தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த பேருந்து நிலையம் மாற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கட்சியினர் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அனைத்து பேருந்துகளும் புறப்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தருமபுரி நகரில் உள்ள புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக இரண்டு பேருந்து நிலையத்தில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பெரும்பாலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர் . அந்த மனுவில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் கடந்த 45 ஆண்டுகளாக கடைகளுக்கு முறையான வாடகை செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய படி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



