தஞ்சாவூர், ஏப்ரல் 25 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்குரிய வாக்கு பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் வாக்குப்பதிவு நிறைவேற்ற அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது.
3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு காரணம் கருதி நேற்று காலை 6 மணி முதல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி மாலை 6 மணி வரை வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி மாலை 6:00 மணி வரை தடை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



