தஞ்சாவூர், மே 18 –
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள அகழியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், அவசர கால பேரிடர் மீட்பு பணி களை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு நீர்வளத்துறை பராமரிப்பு நிதியிலிருந்து ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் 7 புதிய அதிநவீன பொக்லின் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் மூலம் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், வாய்க் கால்கள் மற்றும் நீர் வழி தடங்களில் தூர்வாருதல், கருவேல மரங்களை அகற்றுதல், புதர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பேரிடர் கால மீட்பு பணிகளிலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி, கல்லணை கால்வாய் தொடங்கி மேல அலங்கம், வடக்கலங்கம், மற்றும் கீழழ அலங்கம் பகுதிகள் வரை உள்ள 5 கிலோமீட்டர் தூரம் நீர் வழிப்பாதையில் காணப்படும் கருவேல மரங்கள் முள்புதர்கள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்றும்பணி தொடங்கப்பட்டது.
பெருநிறுவனங்களில் சமூகப் பொறுப்பு நிதி மற்றும் நன்கொடையர்களின் பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் வளங்களை பாதுகாக்கும் இந்த உயரிய முயற்சி பொதுமக்களும் சமூக அக்கறையுடன் பங்கேற்று ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன், இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன், தாசில்தார் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



