தஞ்சாவூர், மார்ச் 11 –
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. 3 பேர் பயன் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா விளங்கி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால் (80). இவர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரோட்டில் நடந்து சென்ற போது நான்கு சக்கர வாகனம் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கோபால் மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக உறவினர்களிடம் டாக்டர்கள் எடுத்துரைத்தனர். இதனால் கோபால் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி கோபால் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. 2 சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்பு தானமாக பெறப்பட்ட கோபால் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோபால் உடல் தஞ்சாவூர் மருத்துவ ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. இந்த தானத்தின் மூலம் 3 பேர் பயன் பெற்றனர்.



