தஞ்சாவூர், ஜூலை 28 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 603 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூபாய் 29 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் டாக்டரின் பரிந்துரையின் பெயரில் ஆக்ஸிஜன் கேட்டு விண்ணப்பித்த திருவேங்கடம் என்பவருக்கு உடனடியாக தீர்வாக ஆக்ஸிஜன் செறிவூட்டியினை அவரது மகன் மணிகண்டன் என்பவரிடம் கலெக்டர் ரேவதி வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் சவுமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



