சேலம், ஆக. 3 –
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சங்ககிரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அமைவிடத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சின்னமலை காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே பல்வேறு பயிற்சிகளை கற்று இளைஞர் படைகளை உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள் மற்றும் திப்புசுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றி வாகை சூடியவர்.
ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் அவரோடு இருந்தவர்களை வைத்து அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரி கோட்டையில் 1805 ஜூலை 31 ஆம் நாள் ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிட்டனர். எனவே ஆடிப்பெருக்கு அன்று தியாகி தீரன் சின்னமலை அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் வீர மரணம் அடைந்த அவருக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சோ.லட்சுமணன், கா.சிவக்குமார், மே.ச.பழனிவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.குத்தாலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் கேந்திரியா ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



